×

டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஊறுகாய், அல்வா, ஜாம் எடுத்து செல்ல தடை

மீனம்பாக்கம்: சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதிதிட்டம் மற்றும் டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் பற்றிய ஒரு இ-மெயில் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஊறுகாய், அல்வா, ஜாம் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் பற்றிய ஒரு இ-மெயில் வந்துள்ளது. இதையடுத்து ஒன்றிய உள்துறை அமைச்சகம், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், வியாபார நிறுவனங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.சென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு, 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை நுழைவாயில் பகுதியிலேயே பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடுகின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பரிசோதிக்கின்றனர். விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து வந்து கண்காணிக்கின்றனர். கார் பார்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் கார்களை வெடிகுண்டு நிபுணர்கள் திவீரமாக சோதனையிட்டு விசாரிக்கின்றனர். விமான நிலையத்தில் பார்வையாளர்கள் வருகைக்கு கடந்த 1ம் தேதியில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் பிசிஏஎஸ் பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்களுடன் தற்போது கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைத்து, விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். அதே போன்று விமான பயணிகளுக்கும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகளை துருவி துருவி சோதிக்கின்றனர். கைப்பைகளில் திரவ பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, பார்சல்கள் அனைத்தையும் பலகட்ட சோதனைக்கு பிறகே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனர். மொத்தத்தில் விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது….

The post டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஊறுகாய், அல்வா, ஜாம் எடுத்து செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Delhi airport ,Chennai airport ,Independence Day ,Alva ,
× RELATED டெல்லி ஏர்போர்ட்டில் பீதி வாரணாசி...